Posts

Showing posts from April, 2013

பெண் எப்போது அழகாக இருக்கிறாள் ?

-------------------------- -------------------------- - பார்க்காதபோது பார்த்து பனங்கிழங்கின் நுனியளவு சிரிக்கும்போது. வெள்ளிக்கிழமை தலைகுளித்து கூந்தல் அடர்த்தி கூடியிருக்கும்போது. செருப்பணிய பாதமெடுத்து நடன வகையில் அபிநயிக்கும்போது. மாப்பிள்ளை வீட்டார் பார்த்துச் சென்றபின் வரும் மாலைப்பொழுதின்போது. கல்லூரித் தேர்வில் தோற்றுவிட்டுத் தந்தைமுன் தெளிவாக நிற்கும்போது. தழைந்திருக்கும் சேலையை வீடு துடைக்க அள்ளிச் செருகும்போது. வியர்த்த நெற்றியை விரல்தீண்டி வழிக்கும்போது. செல்லப் பிராணியிடம் தனித்த மொழியில் பேசும்போது. சிறுமிகள் சூழ மலர்வனத்தைக் கடக்கும்போது. சிரிப்புக்கிடையில் சிந்தனையால் நெற்றி சுருக்கும்போது. பேருந்து நிறுத்தத்தில் மணிபார்த்து வழிபார்த்து ஏங்கும்போது. தலையிலும் இடையிலும் தண்ணீர்க் குடஞ்சுமந்து தளும்பாது செல்லும்போது. தலைப்பிள்ளையைச் சூல்கொண்டு மருண்டு நிற்கும்போது. எல்லாராலும் கைவிடப்பட்டவனை ஏற்றுக்கொள்ள முடிவெடுக்கும்போது.